நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் தொடர்பான சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
பொரல்லை சிறைச்சாலை தலைமையகத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இது சாதாரண மரணம் அல்ல, மனிதப் படுகொலை எனத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறும் என்றும், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விசாரணைகளில் எந்தவித அரசியல் தலையீடும் அல்லது பக்கச்சார்பும் இடம்பெறாது என்றும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








