நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை பிரேதப் பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணப் பரிசோதனை அறிக்கைகளின் படி, தலைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களே சிறைச்சாலை அதிகாரிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளதாக நீதிமன்ற மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள், மருத்துவர் சுஜீவ விக்ரமநாயக்க தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசேட நீதிமன்ற மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன. இக்குழுவில் வைத்தியர்கள் பிரசன்ன அப்புஹாமி, சமந்த விஜேரத்ன, சமிந்த ராஜபக்ஷ மற்றும் ரமேஷ் அக்கியாவன்ன ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் கடுமையான தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் மரணத்திற்கான இறுதி மருத்துவத் தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கான சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில் 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு சடலங்களுக்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதில் இந்தியப் பிரஜை ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். மேலும், சம்பவம் குறித்த விரிவான விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது குற்றப்புலனாய்வுக்கான முக்கிய இடமாகக் கருதப்படுவதால், அங்கு கைதிகளைத் தொடர்ந்து தங்கவைத்திருப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வன்முறையால் சிறைச்சாலை வளாகத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஏற்பட்ட சேதங்களின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








