சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள் சிறுவர்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி அவர்களை அணுக முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களில் போதைப்பொருட்கள் அல்லது மயக்கமடையச் செய்யும் இரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், அவற்றைப் பயன்படுத்தி சிறுவர்களைக் கடத்திச் செல்வதற்கோ அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கோ சிலர் முயற்சிக்கக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ச்சியான கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அறிமுகமற்ற நபர்களிடமிருந்து எந்தவொரு உணவுப் பொருளையோ, பரிசுப் பொருளையோ பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதை சிறுவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், அவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் உரிய கண்காணிப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








