மன்னாரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான விசேட வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் மாணவியின் கன்னத்தில் காயங்கள் மற்றும் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மாணவியை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








