மட்டக்களப்பு நகரின் பிரதான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக விளங்கும் புதுப்பாலத்தின் சேதமடைந்த பகுதிக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் புதுப்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடத்தின் ஊடான போக்குவரத்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டதால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் வழிகாட்டலிலும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலையீட்டின் மூலம் அவசர அடிப்படையில் பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிரந்தர புதிய பாலம் அமைப்பதற்கான நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக மக்கள் பாவனைக்கு திறந்துவிடுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியல் பிரிவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன், நிரந்தர பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை இலகுரக வாகனங்களின் போக்குவரத்தை சீராக முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









