மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 9 நாட்களுக்குள் 35-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தியதுடன், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை பராமரித்த 35 பேருக்கு எதிராக இந்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்தும் டெங்கு அபாய சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, புளியந்தீவு பொதுச் சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பூங்காக்கள் மற்றும் வாவிக்கரையோரப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நுளம்பு பெருகும் இடங்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளை டாக்டர் எம். உதயகுமார் நேரில் பார்வையிட்டதுடன், புளியந்தீவு பகுதியில் தொடர்ச்சியாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டெங்கு அதிகம் பதிவாகும் பகுதிகளாக கல்லடி, நொச்சிமுனை மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்களிடையே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடமும் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவினர் அவதானித்துள்ளனர்.
மேலும், கடந்த மே மாதத்தில் 59 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 62 பேரும் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களிலேயே 35-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டிருப்பது கவலைக்குரிய வளர்ச்சியாகும் என டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்வரும் மழைக்காலத்தில் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், வீடுகள், வளவுகள், வெற்றுக்காணிகள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















