கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TK-731 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதிய சம்பவத்துக்கு உள்ளானது.
246 பயணிகளுடன் இன்று காலை 7.07 மணியளவில் புறப்பட்ட இந்த A330 ரக அகலமான உடல் அமைப்பைக் (Wide-body) கொண்ட பயணிகள் விமானம், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்ப தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக, நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்பிற்கு மேலாக பல சுற்றுகள் பறந்து எரிபொருளின் அளவைக் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அவசரநிலையை முன்னிட்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவுகள், மருத்துவ அவசர சேவைகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த A330 ரக விமானம் இன்று காலை 10.24 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








