கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை, விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, குறித்த பெண் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகநபரிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று (13) காலை தொம்பே – பரன்கொட பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு விசேட சுற்றிவளைப்பில், 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 3 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றுக்கான 3 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிக்கான 20 தோட்டாக்கள், 5 வாள்கள், ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








