மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.29 அமெரிக்க டொலர்கள் (9.59%) அதிகரித்து, ஒரு பீப்பாய் 83.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டபிள்யூ.டி.ஐ. (WTI) கச்சா எண்ணெய் விலை 6.73 அமெரிக்க டொலர்கள் (9.42%) உயர்ந்து, ஒரு பீப்பாய் 78.14 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய ஒருநாள் உயர்வாகவும், ஜூன் 12 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஈரானை மையமாகக் கொண்டுள்ள புதிய இராணுவ பதற்றங்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணை நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்க முடியாது என்றும், ஈரானின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் நீரிணைகளில் கட்டாய கட்டணங்களை விதிப்பதற்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை என ஐக்கிய நாடுகளின் கப்பல் போக்குவரத்து முகவாண்மை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம், சர்வதேச எரிசக்தி சந்தையிலும் கப்பல் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.








