கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (13) காலை குமுக்கன் மற்றும் நாவலடி இடையிலுள்ள கஜபா வெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்க்கலப்பு ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த 52 வயதுடைய பிரதி அதிபர் கே. பாக்கியராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பாதயாத்திரையின் போது கடந்த (12) ஆம் திகதி காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் உயிரிழந்திருந்தார். அதேபோல், முதல் உயிரிழப்பு கடந்த 5 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்ததுடன், வவுனியாவைச் சேர்ந்த 68 வயதுடைய வே. செளந்தரராசா உயிரிழந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









