கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் தொடர்பான தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தகவலின்படி, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்காகக் கொண்ட கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய கிழக்கு கடல் பிராந்தியத்தில் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஈரானின் இராணுவத் திறன்களை பலவீனப்படுத்தும் நோக்கில் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே, அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெற்குப் பகுதிகளான பண்டர் அப்பாஸ், சிரிக் மற்றும் கேஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பதிலடியாக குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது.
அதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.








