ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அரசுக்கு ஆதரவான தரப்புகளும், விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் சில முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில் சிக்கியுள்ளதாகவும், அது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், சமூக ஊடகங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, அவற்றை நிரூபிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சவால் விடுப்பதாகவும் பசன் கஸ்தூரி தெரிவித்தார்.








