வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
எரிசக்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பு (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, முழுமையான பசுமை சக்தி மையங்களாக அவற்றை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் – கப்பல்துறை மின்சாரத் திட்டம் மற்றும் கூரைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








