சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் மாலை வேளைகளில் குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கான முக்கிய இடமாக விளங்கும் இந்த கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் பூங்கா திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் பராமரிப்புப் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தற்போது பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் இயங்காததால் இரவு நேரங்களில் முழுப் பகுதியும் இருள் சூழ்ந்துள்ளதாகவும், தூய்மைப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படாததால் குப்பைகள் தேங்கி சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலை காரணமாக, பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாகக் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரச நிதியில் உருவாக்கப்பட்ட இந்தப் பொதுச் சொத்து உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இதற்கான காரணம் என்ன என்பதையும் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, பூங்காவில் நிலவும் மின்சாரக் கோளாறுகளை உடனடியாகச் சீரமைத்து, சுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மீளமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








