ஹோமகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக பயணித்தல் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள், பதிவு இலக்கத் தகடுகள் இல்லாமை, விதிமுறைகளுக்கு முரணாக மாற்றப்பட்ட விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மேலதிக தொழில்நுட்ப பரிசோதனைக்காக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 16 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.







