கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்று (22) இரவு 11.45 மணியளவில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட உரப்பை ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை சோதனையிட்டபோது, மூன்று பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பிச் சென்றுள்ளவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








