மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்று பாணமை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள், கடந்த 22ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது. இதையடுத்து, அதன் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பல்வேறு பகுதிகளுக்கு தகவல் வழங்கியதன் பின்னர், பாணமை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபர் அதன் இலக்கத் தகட்டை மாற்றி கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் ரூ.8 இலட்சத்து 90 ஆயிரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாகப் பூட்டிவைத்து நிறுத்துவதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் பாதுகாப்புப் பூட்டுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.








