அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை மீறி இரத்தப் பரிசோதனைக்காக கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கட்டணத்திற்குப் பதிலாக ரூ.550 வசூலித்திருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு ஜூலை 28ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.
அதேவேளை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








