தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே, இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வன்செயல்களில் ஈடுபடும் தரப்பினர் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் தனது X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி ஒன்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, குறித்த தாக்குதல் இலக்கு மாறி இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே தாக்குதலாளர்கள் வந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு மாறியிருந்தமை காரணமாக தவறான வீடு இலக்காகி, இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







