சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) பெய்த பலத்த மழையால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், நாவலப்பிட்டி சோலங்கந்த பகுதியில் கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியின் 2ஆம் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதி தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும், கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








