நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடித் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவை என சுட்டிக்காட்டிய அமைச்சர், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதைகளை அமைப்பது முக்கிய நடவடிக்கையாக அமையும் என்றார்.
நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை சுமார் 2,750 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,400 மோட்டார் சைக்கிள் சாரதிகளும், பின்னால் பயணித்தவர்களும் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் மொத்தமாக சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னோடித் திட்டத்தின் கீழ், களுவாஞ்சிக்குடி பிரதான வீதியின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படவுள்ளது. அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், வழக்கமான பாதைக் குறியீடுகளுக்குப் பதிலாக வீதித் தடுப்புகளை அமைத்து, மோட்டார் சைக்கிள் பாதையை ஏனைய வாகனப் பாதைகளிலிருந்து தனியாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.








