பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சாகர காரியவசம், நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபர் அரசுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களிடம் தாக்குதலுக்கு உள்ளாகும் பொலிஸ்மா அதிபராக அவர் வரலாற்றில் இடம்பிடிப்பதை காண விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இவ்வாறான பொறுப்பற்ற கருத்துகளை அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்திற்காக கடந்த காலங்களில் மக்களை பலிகொடுத்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்துகள் அமைந்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துகள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் அச்சமடைந்த தரப்பினரே இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.







