நெடுந்தீவு கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 11 மீனவர்களும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து, உடனடியாக மீட்புப் பணிகளை ஆரம்பித்த இலங்கை கடற்படையினர், நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் இன்று (6) அனைத்து மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக கரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனுடன், கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இந்திய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.








