பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத கருத்துகளைத் திரிபுபடுத்தி தவறான அர்த்தங்களை உருவாக்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமது கருத்துகளைத் திரிபுபடுத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் இறுதியில் மோசமான விளைவுகளை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான எதேச்சதிகார நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து மக்கள் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.








