2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இம்முறை பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் என மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், பரீட்சைக்கான தயாரிப்புகளுக்கு மேலதிகமாக சீரற்ற காலநிலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் மண்சரிவு, மண்மேடு சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் வீதிகளில் சேறும் சகதியும் ஏற்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹட்டன்–கொழும்பு, ஹட்டன்–நுவரெலியா, ஹட்டன்–கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளிலும், தோட்டப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் உள்வீதிகளிலும் மழையின் தாக்கத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
இதனால் தொலைதூர தோட்டப்புறங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் வழக்கத்தைவிட முன்னதாகவே தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகனங்களின் பார்வைத்திறன் குறைவடைவதுடன், வீதிகள் வழுக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. எனவே, மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்டப்புற மாணவர்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெரிதும் தங்கியிருப்பதால், மழை மற்றும் வீதி நிலைமைகளால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாமதம் அவர்களுக்கு மேலதிக சவாலாக அமையக்கூடும்.

இதன்காரணமாக, பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்தை கருத்திற்கொண்டு, வழக்கத்தைவிட முன்னதாகவே வீடுகளில் இருந்து புறப்பட்டு பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சை நிலையத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகச் செல்லுமாறும், அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்லுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சைக் காலப்பகுதியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள், மலைச்சரிவுகள் மற்றும் மழையால் பாதிக்கப்படும் வீதிகளில் விசேட கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மாணவர்கள் பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையும் வகையில் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








