நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டதன் பின்னர், தற்போது கைதிகளிடம் முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும், இதன்மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை குறைக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஸ்கேனர் இயந்திரங்கள் நிறுவப்பட்ட பின்னர் கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சிறைச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியிலிருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்காக, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.








