கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் காணப்பட்டதாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ரிசாரல்டா மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காளி உள்ளிட்ட பல நகரங்களிலும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிப்தோ உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தலைநகர் போகோட்டா மற்றும் மெடலின் நகரங்களில் இருந்து பேரிடர் நிவாரணக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா உள்ளிட்ட விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா, பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.








