நண்பனின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் தாயினால் கைவிடப்பட்டு தந்தையின் பராமரிப்பில் இருந்த 11 வயதுடைய சிறுமியை, தந்தையின் நண்பரான 36 வயதுடைய நபரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், சந்தேகநபர் தலைமறைவாகியதால், அவருக்கு எதிராக அவர் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.
குற்றவாளி தலைமறைவாகிருந்தமை, இச்சம்பவத்தால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், மற்றும் சமூகத்தில் பெருகி வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கம் ஆகியவையே இத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டமைக்கு முக்கிய காரணங்கள் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.







