Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடிக்குள் சிக்கிச் சின்னாபின்னமான தமிழர் தாயகத்தின் நெஞ்சிலே ஆறாத வடுக்களாகப் பதிந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியில், தற்போது தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஐத் தாண்டிச் செல்கின்ற அதிர்ச்சியூட்டும் சூழலிலும், தமிழர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் (Parliament) சென்ற தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, பதவி ஆசையால் படுபயங்கரமான மௌனம் சாதித்து வருவதை தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

“வாரந்தோறும் தனது அவதானிப்பு அறிக்கையின் வெளியிட்டுவரும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் இந்த வாரம் ( 15.08.2026 ) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை பின் வருமாறு”

செம்மணியில் தொடரும் அகழ்வும் வெளிவரும் அவலங்களும்

சிங்களப் பேரினவாத அரசால் தமிழர் தாயகப் பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையின் மறுக்க முடியாத சான்றுகளாக, செம்மணி மனிதப் புதைகுழிகள் இன்று உலகத்தின் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. இது எமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தின் நேரடிச் சாட்சியமாகும். செம்மணி மண்ணிலே எழுமாறாகத் தோண்டப்படுகின்ற குழிகளில் எம்முறவுகளின் மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டி, மிக வேகமாக நகர்ந்து 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ளன. இது வெறுமனே எண்களின் தொகுப்பல்ல; சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து, சிங்கள இராணுவத்தின் இரும்புச் சப்பாத்துகளுக்குள் நசுங்கி மாண்டொழிந்த எம் உறவுகளின் மூச்சற்ற தேகங்கள். இந்த ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையிலும், எமது நலன் சார்ந்து குரல்கொடுக்க வேண்டிய அரசியல் தலைமைகளின் கண்கள் பதவி மோகத்தால் குருடாகிப் போயுள்ளன.

பதவி மோகத்தில் உறங்கும் தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியத்தின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தங்களை மார்தட்டிக்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தச் செம்மணி விவகாரத்தில் தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகின்றமை எம்மைப் பெரும் துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்துகிறது. எம் மக்களின் குருதியிலும் கண்ணீரிலும் அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு, செம்மணி மனிதப் புதைகுழி குறித்தோ அங்கு நாளாந்தம் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் குறித்தோ கிஞ்சித்தும் அக்கறையில்லை. எதிர்வரும் காலத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், அதில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில்தான் தமிழரசுக் கட்சியின் முழுக் கவனமும் குவிந்து கிடக்கிறதே தவிர, இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் அல்ல. இது அவர்களின் சுயநலப் போக்கையும், அரசியல் திவால்தனத்தையே அப்பட்டமாகக் காட்டுகிறது. மக்களின் அவலங்களை விட, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பதவிகளே பெரிதாகத் தெரிகின்றன.

இக்கட்டான தருணங்களில் தொடரும் வரலாற்றுத் துரோகங்கள்

தமிழரசுக் கட்சியின் இந்த வரலாற்றுத் துரோகம் எமக்குக் புதிதான ஒன்றல்ல. காலகாலமாக, தமிழ் மக்கள் இக்கட்டான தருணங்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களுக்குத் துணையாக நிற்பதை விடுத்து, அவர்கள் முதுகில் குத்தித் துரோகத்தனங்களில் ஈடுபடுவதையே இவர்கள் தமது பிரதான அரசியல் தந்திரோபாயமாகக் கொண்டுள்ளனர். சிங்கள ஆட்சியாளர்களின் சலுகைகளுக்காக எம் மக்களின் தியாகங்களை இவர்கள் பலிக்கடாவாக்குகிறார்கள். எமது மக்களின் விடுதலைக்காய் விதையாகிப்போன பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளைச் சிதைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சலுகை அரசியலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எமது இனம் சந்தித்த ஒவ்வொரு பேரிடரின் போதும், இவர்கள் காட்டிய இரட்டை வேடம் எம் கண்முன்னே இன்னும் நிழலாடுகிறது.

சிவில் தரப்புகளின் தனித்த போராட்டமும் அரசியல் கட்சிகளின் அலட்சியமும்

இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டிய மற்றொரு கசப்பான உண்மை யாதெனில், தமிழரசுக் கட்சி மட்டுமல்லாது, இன்று தமிழ்த்தேசியம் பேசுகின்ற அத்தனை அரசியல் தரப்புகளும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பெரிதாக எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பதுதான். வெறுமனே அறிக்கைப் போர் நடத்துவதற்கும், வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதற்கும் மட்டுமே தமிழ்த் தேசியம் இவர்களுக்குப் பயன்படுகிறது. இன்று, இந்த அவலங்களுக்கு நீதி கேட்டு சிவில் சமூகத் தரப்புகள்தான் வீதிகளில் இறங்கி அதிகம் முன்னின்று போராடுகின்றன. மக்களின் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கைவிட்ட காரணத்தால் சாதாரண மக்களே வீதிகளில் இறங்கித் தமக்கான நீதியைக் கோரித் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னார் சதோச விவகாரமும் சுமந்திரனின் பங்கும்

கடந்த காலங்களில், மன்னார் சதோச வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நடைபெற்ற அரசியல் நாடகங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்தப் புதைகுழியானது நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்டது என கார்பன் பரிசோதனை (Carbon Dating) ஊடாக நிரூபித்து, சிங்கள அரசைக் காப்பாற்றும் பின்னணியில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனே இருந்தார் என அப்போது சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் வலுவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழர்களின் நீதியை அடகுவைக்கும் அவர்களின் நயவஞ்சக முகத்தை அந்தச் சம்பவம் எமக்குத் தெள்ளத்தெளிவாகத் திரைநீக்கம் செய்து காட்டியது.

செம்மணியை மூடிமறைக்கும் சதி வலை

இன்று செம்மணி விவகாரத்திலும் அதே சதிவலை பின்னப்படுகிறதா என்ற நியாயமான சந்தேகம் எம் மக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது. செம்மணியையும் 1996 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பழைய புதைகுழியாக நிறுவுவதற்கான திரைமறைவுச் சதிகள் அரங்கேறுகின்றனவா? அதனால்தான் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தில் திட்டமிட்ட மௌனம் சாதிக்கின்றனவா? உலக நாடுகளின் கண்களை மறைத்து, சிங்கள அரசைக் காப்பாற்றும் இத்தகைய சதி முயற்சிகளை முறியடிக்க, உலகத் தமிழர்களும் சிவில் சமூகமும் விழிப்படைய வேண்டும். இந்த மண்ணில் ஒரு சுற்றுலாவி போல வந்துவிட்டுப் போகும் அரசியல்வாதிகளுக்கு எமது மக்களின் ஆழமான வலிகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. தேர்தல் பிரச்சாரங்களின்போது தனக்குப் பின்னால் பெரும் படை ஒன்றை அழைத்துச் செல்லும் சிறிதரன் கூட செம்மணி போராட்டங்களில் சிறப்பு விருந்தினர்போல தனியே தலைகாட்டிவிட்டுச் செல்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.

நீதிக்கான எமது உறுதியான நிலைப்பாடு

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே அற்ப சலுகைகளுக்கானதோ அல்லது பதவி மோகத்துக்கானதோ அல்ல. அது எமது இனத்தின் சுதந்திரத்துக்கான, சுயமரியாதைக்கான, அரசியல் இறைமைக்கான போராட்டம். செம்மணியில் மீட்கப்படும் ஒவ்வொரு எலும்புக்கூடும் எமது விடுதலையின், எமது தியாகத்தின் அழியாத சாட்சியங்கள். இதனை மூடிமறைக்க நினைக்கும் எந்தவொரு துரோகத் தரப்பும், சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலிகளும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஈவிரக்கமின்றி வீசப்படுவார்கள் என்பதை நாம் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம். எம் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை எமது இலட்சியப் பயணம் ஒருபோதும் ஓயாது.

இவ்வாறு தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

August 17, 2026
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!
செய்திகள்

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!

August 17, 2026
ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
செய்திகள்

ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

August 17, 2026
கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

August 17, 2026
ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 17, 2026
கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்; ரொனால்டோ அறிவிப்பு!
செய்திகள்

கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்; ரொனால்டோ அறிவிப்பு!

August 17, 2026
Next Post
கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.