கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சில பெண் சிற்றூழியர்கள், வழக்கமான சீருடைக்கு பதிலாக மத அடையாளம் கொண்ட ஆடைகளை அணிந்து கடமைக்கு வருவதாகக் கூறப்படும் விவகாரத்தை முன்னிறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரச சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சீருடை விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், குறித்த சீருடை விவகாரம் சில தரப்பினரால் இனரீதியான பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
“அனைவருக்கும் பொதுவான சீருடை”, “சீருடை தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக அமுல்படுத்து” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அத்துடன், வைத்தியசாலை நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக பணியாற்றாத ஊழியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாக தேசிய மட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.










