கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.
மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரத்திற்குட்பட்ட ஜொபியல் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
கோரகல்லிமடு ரமண மகரிஷி பாடசாலையிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான கொழும்பு வீதி வழியாகச் சென்று கிரான் மெதடிஸ்த திருச்சபையை சென்றடைந்தது.
பேரணியில் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்திச் சென்றனர்.
மேலும், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குருவும், வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளருமான அருட்பணி டாக்டர் கே. எஸ். நிசாந்த், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட்பணி டி. எனோசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


















