இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவைக்கான முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டமாக 25 கிலோமீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான விமானப் பாதைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
முதற்கட்ட சோதனைகளில் கொழும்பு – தென் கடற்கரை, கட்டுநாயக்க மற்றும் போர்ட் சிட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பாதைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இரண்டு பயணிகள் ட்ரோன்கள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோதனைத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் ட்ரோன்களின் இயக்கத்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் பொருத்தமான விமானப் பாதைகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் முதன்மையாக நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை, அவசரகால மற்றும் அனர்த்த மீட்புப் பணிகள், கடல்சார் மற்றும் கடற்படை நடவடிக்கைகளிலும் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.
பயணிகள் ட்ரோன்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுவது அவற்றின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை வணிக ரீதியாக ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








