பொலிஸ் தலைமையகத்தின் தரவுத்தள அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் இயங்கும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவின் ஊடாக இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை பரிசீலித்தல், பொலிஸ் அறிக்கைகளை சரிபார்த்தல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் கணினிமயமான தரவுத்தள அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று (20) பிற்பகல் முதல் குறித்த தரவுத்தள அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துக்கு (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமைப்பை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தரவுத்தள அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை புதிய பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு மீண்டும் வழமைக்கு வந்த பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







