இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முறையாக நிர்வகித்து, சுறா இனங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் அண்மையில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பலநாள் மீன்பிடிப் படகுகளில் சுறா மீன்கள் பிரதான பிடிப்புடன் இணைந்த இடைப்பிடிப்பாக பிடிக்கப்படுகின்றன. சுறா துடுப்புகள், செவுள்கள், தாடைகள், தோல்கள் உள்ளிட்ட பகுதிகளும், உயிருள்ள அலங்கார சுறா இனங்களும் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
எனினும், உலகளவில் பல சுறா இனங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதால், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட சுறா இனங்களைப் பாதுகாப்பதுடன், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இனங்களை மாத்திரம் ஏற்றுமதி செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், சுறா மீன்கள் பிடிக்கப்படும் இடத்திலிருந்து இறுதி நுகர்வோர் வரை அவற்றின் பயணத்தை கண்காணிக்கக்கூடிய வகையில் தரவு சேகரிப்பு மற்றும் தடமறிதல் முறைமையொன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்றுமதி செய்யப்படும் சுறா மீன் பாகங்கள் மற்றும் உயிருள்ள அலங்கார சுறாக்களின் ஏற்றுமதி அளவை அதிகரிக்காமல், தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகம், சுறா மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து விரிவான சுறா மீன் முகாமைத்துவத் திட்டத்தை தயாரிக்கவுள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.







