தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திற்குள் எவ்வித சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச துறை ஊழியர்களுக்காக இணையவழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்து பாதுகாப்பில் புதிய விதிமுறைகள்
இதேவேளை, நாடு முழுவதும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்பு ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சி வழங்கவும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரமான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.







