விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் முதலீடுகள் மற்றும் உபகரணங்கள் வீணாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, திட்டத்தின் முன்னோடிக் கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதுடன், ஒவ்வொரு துறையும் எதிர்கொள்ளும் சவால்களை தனித்தனியாகக் கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆரம்ப கட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் மூலம் பெறப்படும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் இனங்காணப்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் கற்றல் குறைபாடுகளைக் கொண்ட மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களுடன் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டத்தில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்கனவே காணப்படும் பாடசாலைகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








