தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், வல்வெட்டித்துறை நகரசபையினரால் ஆலய சுற்றாடல் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஆலய சுற்றாடல் புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு முழுமையான தடை
குறித்த மண்டலத்தில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி ஆலய சுற்றாடலில் வெற்றிலை மென்றுகொண்டிருந்த ஐவருக்கு எதிராக வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ப. தினேஸ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.







