இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தொழிற்துறையில் பெருமளவான வேலைவாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் வேலையின்மை பிரச்சினை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன
தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதுடன், ஆயிரக்கணக்கான பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தப் பணியிடங்களுக்குத் தேவையான தகைமைகளைக் கொண்ட தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது வேலையற்ற நிலையில் உள்ளவர்களில் பலருக்கு குறிப்பிட்ட தொழிற்தகைமைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாமையே இந்த நிலைமைக்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்கு அழைத்துவருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பாத நிலையும் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.







