பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) காலை வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போன வைத்தியருக்குச் சொந்தமான கார், மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மஹியங்கனை நோக்கிப் பயணித்தமை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போது, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் நேற்று இரவு வைத்தியரின் கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கார் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன வைத்தியரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இன்று அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், குற்றப் புலனாய்வுத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சந்தேகத்திற்கிடமான பகுதிகளை முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
வைத்தியர் காணாமல் போனமை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.








