2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை வழங்குவதற்காக மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் முன்னணி சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த கொடூர தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தே கொழும்பு விசேட மேல்நீதிமன்றில் நீண்டகாலமாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது இரு தரப்பிலிருந்தும் பல்வேறு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அனைத்து சாட்சியங்களையும், இரு தரப்பு சட்டத்தரணிகளின் விரிவான வாதங்களையும் முழுமையாகப் பரிசீலித்த பின்னரே, நீதிமன்றம் தீர்ப்புக்கான இந்தத் திகதியை அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதிகள் குழாம் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.








