மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில், முறையான நடைமுறை உருவாக்கப்படவுள்ளது.இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என, நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலிலே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான முறையான நடைமுறையை உருவாக்குதல், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுதல், ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகளாகக் குறைத்தல், கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் ஆகியவை குழுவின் முக்கிய பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர், இக்குழு தமது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.







