காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகல் முதல் காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து அவரது கார் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
கார் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, காரிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் அடர்ந்த புதர் பகுதிக்குள் அமைந்திருந்த பாறையொன்றின் மீது வைத்தியரின் சடலம் கிடந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து மூன்று வகையான மருந்துகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த மருந்துகளை உட்கொண்டதன் மூலம் வைத்தியர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், வைத்தியர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்தமை தொடர்பான தகவல்களும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியரின் மரணம் தொடர்பான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








