மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேகத்திற்கிடமான மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனையின்போது, நரம்பியல் நோய்களுக்காக பயன்படுத்தப்படும் சில வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டரீதியாக அனுமதியற்ற 8 வகையான மருந்துகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், உரிய தகுதிகள் இன்றி ஒருவர் குறித்த மருந்தகத்தை நடத்தி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரச வைத்தியசாலைகளுக்காக விநியோகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த தனியார் மருந்தகத்துக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.








