நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான சூறாவளி மற்றும் வெள்ளப்பாதிப்புகளை இலங்கையும் எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களின் துயரத்தை தாம் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல், பிரதமர் பலேந்திர ஷா உள்ளிட்ட அரசாங்கத்தினருக்கும், நேபாள மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, நிவாரணம் மற்றும் மீளமைப்புப் பணிகளை முன்னெடுத்து வரும் நேபாள அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.







