பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேபாளத்தின் தொடர்ச்சியான மனிதாபிமான மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்குமாறு மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இப்பேரழிவினால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகள் மற்றும் துயரங்களுக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக நேபாள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமைப் பிணைப்புகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தினார். இந்த நிதியுதவியானது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
27ஆம் திகதி வியாழக்கிழமை காலை, வெளிநாட்டு அமைச்சர் விஜயத ஹெரத், தனது நேபாள சகா வெளிநாட்டு அமைச்சர் ஷிசிர் கானலுடன் தொலைபேசியில் உரையாடியபோது, நேபாளத்திற்கு இலங்கையின் இரங்கலையும், உறுதியான ஆதரவையும், ஒற்றுமையையும் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கை பங்களிக்கக்கூடிய பொருத்தமான வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.







