மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நேற்று (27) மாலை இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, 2.045 கிலோ ஹெரோயின், 56.8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 625,000 ரூபாய் பணம் மற்றும் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை விலேகொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த குறித்த இருவரும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







