சுமார் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த இரு சீனப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 35 வயதுடைய குறித்த இருவரும் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து சிகரெட்டுகளை கொள்வனவு செய்த அவர்கள், மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று (28) காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கொண்டு வரப்பட்ட நான்கு பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சுங்க அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








