கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட 26 வயதான யுவதியுடன் பயணித்த காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் வீதித் தடையொன்றை அமைத்து குறித்த காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், காரைச் செலுத்திய நபர் பொலிஸாரின் உத்தரவை மீறி தொடர்ந்து பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது, காரைச் செலுத்திய சந்தேகநபர் கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அப்பகுதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








