பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்காகவே அவர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தது. இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை.
தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு திகதியை வழங்குமாறும் ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, இன்று அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி விசாரணைக்கு தேவையான வாக்குமூலத்தை வழங்கவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.








