வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினசரி நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் கனமீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 23 முதல் 24 சதவீதம் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்தும், சுமார் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் நாளொன்றுக்கு சுமார் 6 இலட்சம் கனமீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வறட்சியான காலநிலையால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களே தற்போது ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளிலும் நீர் ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








